வெல்லாவெளியில் தோட்டத்திற்குள் கஞ்சா செடி நட்டவருக்கு அபராதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் கஞ்சா செடியினை தோட்டத்துக்குள் வளர்த்த நிலையில் கைதுசெய்யப்பட்டவருக்கு 9ஆயிரம் ரூபா அபராதமும் ஒரு வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை,தும்பாளை பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இந்த கஞ்சா செய்கையினை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது இரண்டரையடி நீளம் கொண்ட 10 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டதுடன் தோட்டத்தின் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இவர் இன்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.என்.றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஒன்பதாயிரம் ரூபா அபராதமும் ஒரு வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.வெலகெதர தலைமையிலான பொலிஸ் குழுவினர் வெல்லாவெளி பகுதியில் போதையொழிப்பு நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.