கிழக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சியில் அமர ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு தீர்மானம்

நாளை நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை அமர்வில் எதிர்க்கட்சியாக தாம் செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் எதிர்க்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.


இன்று திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் உள்ள தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் எதிர்க்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணசபையின் ஆட்சியில் எந்த வித ஊழல்களும் இல்லாமல் சிறந்தமுறையில் ஆட்சியை கொண்டுசெல்லும் வகையில் செயற்படுவதற்காக கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சியில் அமர தீர்மானித்ததாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தம்முடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதனால் நாளை நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் 11 மாகாணசபை உறுப்பினர்கள் செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியை பிடிக்கவேண்டும் எண்ணத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உரமூட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.தமிழர்களின் விடுதலை காணிப்பிரச்சினைபற்றி பேசுபவர்கள்,மூன்று இனங்களையும் சேர்ந்தவர்கள் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பத்தினை நழுவவிட்டுள்ளனர்.இதனை தமிழ் மக்கள் இன்று உணர்ந்துள்ளனர்.

இவர்களின் ஆட்சி தொடர்பில் நாங்கள் தீவிரமாக ஆராய்ந்துவருகின்றோம்.கிழக்கு மாகாணசபையில் அபிவிருத்தி நிதி 1600மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் இரண்டு அமைச்சுகளை கொண்டுள்ள முதலமைச்சருக்கும் சுகாதார அமைச்சருக்கும் 800மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பினை சேர்ந்த ஒருவருக்கு நூறு மில்லியனும் 11 கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களைக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு 50மில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

நல்லாட்சி சமத்துவமான நிதிப்பங்கீடு என்கிறார்கள்.2015ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அனுமதியெடுத்ததை தாண்டி பிழையான முறையில் பங்கிட்டுள்ளதை நாங்கள் காண்கின்றோம்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர்களான உதுமாலெப்பை, விமலவீரதிசாநாயக்க,பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் உட்பட 10மாகாணசபை உறுப்பினர்கள் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.