இலங்கையின் 67வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று காலை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமையாக அரச திணைக்களங்களிலேயே சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்டுவந்த நிலையில் இம்முறை பொது அமைப்பு ஒன்று திறந்தவெளியில் இலங்கையின் 67வது சுதந்திர தினத்தினை சிறப்பாக அனுஸ்டித்தது.
மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையினால் மட்டக்களப்பு விபுலானந்தா பூங்காவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் தலைவர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மட்டக்களப்பில் எனது தலைமையில் பல தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.இன்று ஒரு வித்தியாசமாக சுதந்திரமாக நின்று கொடியேற்றிய சந்தோசம் எனக்கு ஏற்பட்டது.
ஒரு காலத்தில் நாங்கள் தேசியக்கொடியேற்றுவது என்றால் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படையினரை நிறுத்தவேண்டிய நிலையிருந்தது.அந்தவேளையில் பயத்துடனும் பீதியுடனும் கொடியேற்றுகின்ற காலம்சென்று,அரசாங்கத்தின் கட்டளையின்படி கொடியேற்றுகின்ற காலம் சென்று மக்கள் முன்வந்து தேசிய கொடியை ஏற்றுவதை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது.இதனை மற்ற மாவட்டங்களும் பின்பற்ற வேண்டும்.அப்போதுதான் நாங்கள் உண்மையான சுதந்திரத்தினை பெறமுடியும்.
கடந்த காலத்தில் சுதந்திரமற்ற ஓரு நிலையிருந்தது.அதனை நல்லெண்ணம் கொண்ட சிங்கள மக்களும்,தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்று சேர்ந்து சுதந்திர காற்றை வீசும்படியும் சுதந்திர அலையையும் ஏற்படுத்திதந்துள்ளனர்.
அதனால் நாங்கள் ஒன்றாககூடி இவ்வாறான நிகழ்வில் பங்குபற்றுகின்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.இதை நாங்கள் தொடரவேண்டும்.இது தொடரும்போதே எங்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.
தற்போது கிடைத்துள்ள சுதந்திரம் வெறும் அரசியல் சுதந்திரம் மட்டுமே.
பொருளாதார சுதந்திரத்தினை நாங்கள் பெறவேண்டும்.அதற்காக புத்திஜீவகளின் உதவியுடன் தொடர்ந்து போராடி விரைவில் அதனையும் அடையவேண்டும்.