கடந்த வெள்ள அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களை சந்தித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
கால்நடை வளர்ப்பாளர்களை கிரானில் சந்தித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கிவருகி;ன்றனர்.குறிப்பாக மேய்ச்சல் தரைக்காணிகளில் அத்துமீறிய பயிர்ச்செய்கை மற்றும் வனஜீவராசி திணைக்களத்தின் கெடுபிடிகள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றிற்கான தீர்வினை பெற்றுத்தருமாறு கால்நடை வளர்ப்பாளர்களால் இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக தமது கால்நடைகளை மேய்ச்சல் தரைக்காணிகளில் அத்துமீறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் சுடுவதுடன் மாடுகளை பிடித்துச்செல்வதாகவும் சில வேளைகளில் மாடுகளை பிடித்துவைத்து பணம் கேட்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் கடந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் கால் நடை வளர்ப்பாளர்களால் கோரப்பட்டது.
இது தொடர்பில் இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் காரணமாக கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதுடன் பல மாடுகள் கடத்திச்செல்லப்பட்டுள்ளதுடன் பல்வேறு வழிகளிலும் கால்நடைகள் காணாமல்போயுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவாயிரம் கால்நடைகள்(மாடுகள்)இவ்வாறு காணாமல்போயுள்ளன.இவர்களுக்கான நஸ்ட ஈடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.அதேபோன்று மேய்ச்சல் தரை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த காலத்தில் பல தடவைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
எனினும் இதுவரையில் எதுவித தீர்வுகளும் வழங்கப்படவில்லை. அவற்றிக்கான தீர்வுகளைப்பெற்றுக்கொள்வதற்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வேன் எனவும் அவர் தெரிவித்தார்.