கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் யானை பிரச்சினை தொடர்பில் ஆராயும் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைக்காணிகளில் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் யானைகளின் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா மற்றும் பா.அரியநேத்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது கால்நடை வளர்ப்பாளர்கள் மீது வனஜீவராசிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட நடவடிக்கைகளை மனிதாபிமான ரீதியில் மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களால் கோரப்பட்டதுடன் மேயச்சல் தரை காணியில் அத்துமீறி விவசாய செய்கையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் மேயச்சல்தரைக்காணிகள் வரையறைசெய்யப்படவேண்டும் என வலிறுத்தப்பட்டதுடன் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள யானை தாக்குதல்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதுடன் தற்போது பெரும்போக அறுவடை நடைபெற்றுவரும் நிலையில் யானை தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் 15 தினங்களுக்கு வனஜீவராசி திணைக்கள உத்தியோகத்தர்களை அப்பகுதியில் கடமையாற்ற நடவடிக்கையெடுக்கவும் பணிக்கப்பட்டது.

குறிப்பாக யானை தாக்குதல்களை அதிகளவில் எதிர்கொள்ளும் வெல்லாவெளி, பட்டிப்பளை,வவுணதீவு,செங்கடி,கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் யானை தாக்குதல்களில் இருந்து மக்களை காக்கும் வகையில் வனஜீவராசி திணைக்களத்தின் பணிகளை மேம்படுத்துமாறு இங்கு வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் யானைகளின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுவரும் யானை வேலிகள் அமைக்கும் பணியை விரைவுபடுத்தவும் உறுதியான முறையில்அமைக்குமாறும் இங்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இதேபோன்று கடந்த காலத்தில் யானை தாக்குதல் காரணமாக பாதிப்புகளை எதிர்கொண்டவர்களுக்கு நஸ்ட ஈடுகள் வழங்குவது மட்டக்களப்பு மாவட்டத்திலேயே மிகவும் மந்த கதியில் நடைபெறுவதாக இங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அதற்குரிய நடவடிக்கையினை விரைவுபடுத்துமாறும் இங்கு கோhரப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ப்தி தரும் விடயமாகவே இருந்துவருவதாகவும் மாவட்ட செயலாளரின் அறிவுறுத்தல்கள் கூட பின்பற்றப்படுவதில்லையெனவும் இங்கு உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

தொலைபேசியல் அவசரத்திற்கு தொடர்புகொள்ளமுடியாத நிலையே இருந்துவருவதாகவும் தெரிவித்த அவர்,அங்கு அவர்களது தொலைபேசி இலக்கத்தினையும் அனைவருக்கும் முன்பாகவும் பரிசோதித்தும் காட்டினார்.

இந்த கூட்டத்தில் வனஜீவராசி திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் உட்பட உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.