கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலய அதிபர் இடமாற்றத்தினை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தின் அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவற்றினை இடைநிறுத்துமாறு கோரியும் பெற்றோர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர்.


பாடசாலைக்கு முன்பாக இன்று காலை 7.00மணியளவில் ஒன்று திரண்ட பெற்றோர் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஒரு சிலரின் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக அதிபரை இடமாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் இதன்போது பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் ஆகியோர் ஆர்ப்பாட்டங்காரர்களுடன் கலந்துரையாடினர்.

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் கையொப்பமிட்டு இந்த இடமாற்ற கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால் விசாரணை மேற்கொள்ளவேண்டி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் நிரூபிக்கப்படாமல் இடமாற்றம் செய்யப்படுவதை கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் அதிபரின் இடமாற்றம் நிறுத்தப்படும் வரையில் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,ஒருவர் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இடமாற்றம் செய்யமுடியாது.குற்றவாளியென இனங்காணப்பட்டால் மாத்திரமே நடவடிக்கையெடுக்கமுடியும்.அவ்வாறான நடவடிக்கையினை அனுமதிக்கமுடியாது.இது தொடர்பில் வலய கல்விப்பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஆகியோரிட் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கையெடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இந்த அதிபரின் திட்டமிடலில் சிறப்புறும் எம் பிள்ளைகளின் முன்னேற்றம் தொடர உதவுங்கள்,சீரான கல்வி முன்னெடுப்பினை குழப்பவேண்டாம்,அதிபர் இன்றி ஐந்தாம் தர பரீட்சை விண்ணப்பத்தில் பெற்றோர் எவ்வாறு கையொப்பம் இடுவது போன்ற சுலோகங்களை தாங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.

பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையுறு ஏற்படாதவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.