டெங்கு பெருக்கத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பிலான விசேட கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் அதிகரித்து வரும் டெங்குப் பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான விஷேட கூட்டம் சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் தலைமையில் பிரதேச செயலகத்தில் நேற்று (20.02.2015) மாலை இடம் பெற்றது.


பிரதேச செயலகப் பிரிவில் நுளம்புப் பெருகக் கூடிய இடங்களை வைத்திருப்போரும் குப்பைகளை அகற்றாமல் வெற்றுக் காணிகளை வைத்திருப்போருக்கும் எதிராக சட்ட நடிவடிக்கை எடுப்பது என்றும் தீர்மாணங்கள் எடுக்கப்பட்டதுடன் எதிர்வரும் புதன் கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குப்பைகளை அகற்றி மக்களுக்கு நுளம்புப் பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கம் தொடர்பாகவும் விழிப்பூட்டல் செயற்பாடுகளை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இரண்டு நாள் விழிப்பூட்டல் நிகழ்வுகளுக்கு கோறளைப்பற்று பிரதேச சபை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைகளின் குப்பை அகற்றும் வாகனங்களை பயன்படுத்துவதுடன் மேலதிகமாக வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்களுக்குரிய செலவுகளை கோறளைப்பற்று பிரதேச சபை பொறுப்பேற்கும் என்று கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளரும் அதிகாரம் அளிக்கப்பட்ட உத்தியோகத்தருமான எஸ் சிஹாப்தீன் தெரிவித்தார்.

இவ்விரண்டு நாள் விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டத்திற்கு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், கோறளைப்பற்று பிரதேச சபை, ஓட்டமாவடி பிரதேச சபை, வாழைச்சேனை பொலிஸார் பிரதேச செயலக பிரிவில் உள்ள விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பங்களிப்புக்களும் பெறப்படல் வேண்டும் என்று பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளரும் அதிகாரம் அளிக்கப்பட்ட உத்தியோகத்தருமான எஸ்.எம். சிஹாப்தீன், வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் விதானகே, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எம்.எஸ்;.நௌபர், ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் சாபி, ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அல்பத்தாஹ், மற்றும் பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.