மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறப்பு வீதத்தினை அதிகரிக்கவேண்டும் -பா.அரியநேத்திரன் பா.உ

மட்டக்களப்பு மாவட்டத்தில்  75 சதவீதமாக நாம் இருக்கின்றோம். இந்த விகிதாசாரம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் நிலையை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த நிலை மாறக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.இந்த சந்தர்ப்பத்தை தடுக்கவேண்டுமாக இருந்தால்,  பிறப்பு வீதத்தை  அதிகரிக்கவேண்டும் என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்;குட்பட்ட தாழங்குடா ஸ்ரீவிநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி திங்கட்கிழமை (23) நடைபெற்றது. இதில்; பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'எமது தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக போராடிக்கொண்டிருப்பவர்கள் நாங்கள்.  கடந்தகாலத்தில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள். வேலைவாய்ப்பு, அபிவிருத்தி போன்றவற்றில் புறக்கணிப்பட்டிருக்கின்றார்கள்.

இவற்றை ஓரளவேனும் சீர்செய்யவேண்டும் என்பதற்காக எஞ்சியுள்ள இரண்டரை வருடங்களுக்கு நாம் இணைந்து ஆட்சிசெய்ய இருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய மதுபானச்சாலைகளும் யாழ். மாவட்டத்தில் அதிகூடிய போதைவஸ்து பாவனையும் இருப்பதாக கூறப்படுகின்றது.

இது திட்டமிட்டு எமது இளைஞர்களை திசைதிருப்புவதற்காகவும் புத்திக்கூர்மையை இல்லாதொழிப்பதற்காகவும் ஒழுக்கசீலர்களாக வருவதை தடுப்பதற்காகவும் இச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விடயங்களில் எமது மாணவர்களை, பிள்ளைகளை விடாமல் பெற்றோர்கள் பெரியோர்கள் பழைய மாணவர்கள்; கவனம் செலுத்தவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் 41 சதவீதமாக உள்ளனர். எமது சகோதர இனமான இஸ்லாமிய இனத்தவர்கள் 35 சதவீதமானவர்கள். அத்துடன் ஏனைய இனத்துடன் இருக்கின்றோம். மாணவர்களை எடுத்துக்கொண்டால் கிழக்கு மாகாணத்தில் 41 சதவீதம் இஸ்லாமிய மாணவர்கள் பாடசாலை செல்வதாகவும் 39 சதவீதம் தமிழ் மாணவர்கள் பாடசாலை செல்வதாகவும் 22 சதவீதம் சிங்கள மாணவர்கள் பாடசாலை செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதிலிருந்து ஒன்றை மட்டும் நாம் புரிந்துகொள்ளவேண்டியுள்ளது.  என்னவென்றால், எமது தமிழ் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா அல்லது எமது பிறப்பு வீதம் குறைந்திருக்கின்றதா என்று பல கேள்விகள் எம்முள் இருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில்  75 சதவீதமாக நாம் இருக்கின்றோம். இந்த விகிதாசாரம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் நிலையை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த நிலை மாறக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்தை தடுக்கவேண்டுமாக இருந்தால்,  பிறப்பு வீதத்தை  அதிகரிக்கவேண்டும். இது நகைச்சுவையான விடயம் அல்ல. சிந்திக்கவேண்டிய விடயம்.  எமது பிறப்பு வீதத்தை குறைப்போமாக இருந்தால்,  2025ஆம் ஆண்டு 75 சதவீதமாக இருக்கும் நாங்கள், 65 சதவீதமாக ஆகுவோம். எமது இனத்தை, இடத்தை, கலாசாரத்தை, கலை பண்பாட்டை, மொழியை பாதுகாக்கவேண்டும் என்று சொல்லுகின்றோம். இவற்றை பாதுகாக்கவேண்டுமாக இருந்தால், எமது சந்ததிகள் இருக்கவேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் இட அபகரிப்பு இடம்பெறுகின்றது என்று பலர் கூறுகின்றார்கள்.

அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் தடுக்கின்றோம். வழக்குத்தாக்கல் செய்கின்றோம். ஆனால், அந்த இடத்தில்  குடியேறக்கூடிய மனோநிலை தமிழர்களாகிய எமக்கு இல்லை என்பதே உண்மை.

அவ்வாறான மனோநிலை எம்மிடத்தில் இல்லை என்றால், எமது இடத்தை பாதுகாப்பது கடினமான விடயமாக இருக்கும்.  இவ்வாறான மனோநிலை எம்மிடத்தில் இல்லாதிருக்கும்போது,  இந்த இட அபரிப்புகளை நாம் தடுப்பதால் எந்தவித பயனும் இல்லை. எனவே இவற்றை மனதில் நிறுத்தவேண்டும்' என்றார்.