மட்டக்களப்பில் நடுத்தர முயற்சியாளர்களுக்கு அறிவூட்டல் செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடுத்தர வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோரின் தொழில் முயற்சியை அபிவிருத்திசெய்வது தொடர்பிலான அறிவுறுத்தல்களை வழங்கும் செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு கோப்பின் விடுதியின் மண்டபத்தில் நடைபெற்றது.


இலங்கை வர்த்தக சம்மேளனமும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனமும் இ;ணைந்து உலக வங்கியின நிதியுதவியுடன் நிதி திட்டமிடல் அமைச்சின் அனுசரணையுடன் இந்த நிகழ்வினை நடத்தியது.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் முகாமையாளர் க.குகதாஸ் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் நிதி திட்டமிடல் அமைச்சின் நிதி முகாமையாளர் திருமதி கிரேசா வொல்பிட்டகம,இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முகாமையாளர் சந்திர விதானகே உட்பட்ட தொழில்சார் பயிற்சிவ ல்லுனர்கள்,உலக வங்கியின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட நடுத்தர வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.

வேலைவாய்ப்பினை மேம்படுத்தல் மற்றும் பெறுமதி சேர்த்தல் செயற்பாடுகளை மேம்படுத்தும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான நிதி வளங்களை வழங்குவது இதன் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இதன்போது பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

கணக்கறிக்கையினை பேணுதல்,வியாபாரம் தொடர்பான விருத்தியினை அதிகரித்தல்,கடன்கள் தொடர்பிலான விழிப்புணர்வினை ஏற்படுத்தல்,நிதிவசதிக்காக கடன்வசதிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலான அறிவினை ஏற்படுத்தல்,தொழில் முயற்சியாளர்களால் ஏற்படும் சூழல் மாசடைதலை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வினை ஏற்படுத்தல் என்பன இதன்போது பயிற்சியாக வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் முகாமையாளர் க.குகதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் அபிவிருத்திக்காக மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் கடந்த காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.