பதவியை தக்கவைப்பதற்காக எந்த பேயுடனும் மு.கா.சேரும் - ஜனா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது பதவிகளை தக்கவைப்பதற்காக எந்தபேயுடனும் கூட்டுச்சேருமே தவிர அவர்களுக்கு இனம் சார்ந்த செயற்பாடுகள் எதுவும் இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.


இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இறுதியாக எது நடக்கும் என எதிர்பார்த்தோமோ அதுவே கிழக்கு மாகாணசபையில் ஆட்சி விவகாரத்திலும் நடந்துள்ளது. தலைவர் அஸ்ரப்பின் பின்னரான மு.கா.நடவடிக்கைகளை அவதானித்துவரும் எவரும் இதுதொடர்பில் ஆச்சரியம் கொள்ளமாட்டார்கள். ஆனால் அனைவரும் ஆச்சரியபடுவது தமது செயற்பாட்டுக்கு கவுண்டமனி-செந்தில் நகைச்சுவையை விஞ்சும் அளவுக்கு அவர்கள் கொடுக்கும் விளக்கத்திற்கேயாகும்.

கடந்த மாகாணசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் இணைந்ததன் காரணமாகவே இந்த அரசாங்கம் வடமாகாணசபையை நடத்தியது என்றும் அத்தேர்தல் நடத்தப்பட்டதற்கு உரிiகோருகின்றார்கள்.

தங்களது கனவான கரையோர மாவட்ட கோரிக்கையினை துணிவுடன் கேட்கமுடியாதவர்கள்.வடமாகாணசபை தேர்தலை நடத்தக்கோரினார்கள் என்றால் இவர்களை எப்படி சொல்வது.தமக்கு கூரையேறி கோழி பிடிக்கமுடியாதவர்கள் எமக்கு வானம் ஏறி வைகுண்டம் காட்டினார்களாம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட இறுதிவரை மதில்மேல் பூனையாக இருந்து இறுதி ஒரு வாரத்துக்குள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து கொள்கை பிடிப்புடன் வெளியேறி தபால் மூல வாக்காளர்கள் உட்பட முஸ்லிம் மக்களுக்கு வாக்களிக்கும் திசையை காட்டி முஸ்லிம் மக்களை வழிப்படுத்தியவர்கள் தற்போது ஜனாதிபதி தேர்தல் முடிந்து மூன்று வாரம் முடிந்த நிலையில் மீண்டும் அதே கொள்கைபிடிப்புடன் உறவை அறுத்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சியை அமைத்துள்ளனர்.இதற்கு சாட்சியாக தற்போமைய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இழுக்கின்றார்கள்.

எனக்கு இவர்களை நினைக்கும்போது முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல கூறியது ஞாபகத்துக்கு வருகின்றது.அவர் கூறினார் கம்யுனிசத்தை எதிர்க்க எந்த பேயுடனும் கூட்டுச்சேர தயார் என்றார்.இது அவரது கொள்கை சார் விடயம்.ஆனால் மு.கா.வின் கொள்கை சார்விடயமோ பதவிக்காக எந்தப்பேயுடனும் கூட்டுச்சேரவோ,கூட்டைப்பிரிக்கவோ தயார்.அவர்களின் இறுதி மூச்சு பதவியே ஒழிய இனம்சார் செயற்பாடு எதுவும் இல்லை என்பதாகும்.இவ்வாறே முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பில் நான் கருதுகிறேன்.