கிழக்கு மாகாணசபையில் அம்பாறை தமிழர் ஒருவருக்கு அமைச்சு பதவி வழங்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கோரிக்கை

கிழக்கு மாகாணசபையில் ஒரு சில தினங்களில் ஆட்சி அதிகாரம் அமைக்கப்படவுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் அமைச்சு பொறுப்புகளில் ஒன்றை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கவேண்டும் என மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கடந்த கால யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பகுதியாக அம்பாறை மாவட்டம் இருக்கின்ற நிலையில் தமிழர்கள் எதுவித ஆதரவு அற்ற நிலையிலேயே இருந்துவருகின்றனர்.

தமிழ் மக்கள் கடந்த காலத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்த அம்பாறை மாவட்டத்தில் இன்று சிறுபான்மை சமூகமாக மாறியுள்ளனர்.இதற்கு தமிழ் மக்களின் அரசியல் பலம் இன்மையும் காரணமாகும்.

கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் இருந்த தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களின் நன்மை கருதிச்செயற்படவில்லை.அதற்கு சான்றாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்று அதேவேளையில் அரசாங்கத்திடம் தனது வயிற்றை வளர்ப்பதற்காக சென்று தமிழ் இனத்தினை குழிதோண்டிப்புதைத்துவிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் சமூகம் அரசியல் பலம் இன்றி தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுவந்ததுடன் மாறிமாறி வந்த அரசாங்கங்களில் இருந்துவந்த முஸ்லிம் அரசியல்வாதிகளினால் தமிழ் மக்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டே வந்தனர்.

ஆதரவற்றிருந்த அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு கடந்த கிழக்கு மாகாணசபை மற்றும் பிரதேசசபை மூலம் ஓரளவு பலம்பெற்றுள்ளனர்.எனினும் இந்த பலத்தினால் எதனையும் செய்யமுடியாத நிலையிலேயே இருந்துவருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் காரணமாக கிழக்கு மாகாணசபையிலும் மாற்றம் ஒன்று ஏற்படவுள்ளது.கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தினைப்பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

வெளிவரும் தகவலின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இரண்டு அமைச்சு பதவிகளும் ஒரு பிரதி தவிசாளர் பதவியும் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.அதில் பிரதி தவிசாளர் மூலம் பாதிக்கப்பட்ட,பின்தங்கிய பகுதிகளுக்கு எந்தவித சேவையினையும் ஆற்றமுடியாது.

எனவே இரு அமைச்சு பதவியில் ஒரு அமைச்சு பதவியை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள புத்திஜீவிகள்,எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்த தேவையான மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகவும் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.