இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தினை தொடர்ந்து சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கோரம் இல்லாத காரணத்தினால் 11.00மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மீண்டும் சபை அமாவுகள் 11.15மணியளவில் ஆரம்பமான நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணசபையில் உள்ள ஆளும் கட்சியினர் பலர் எதிர்க்கட்சியின் பக்கம் வந்துள்ளதனால் ஆட்சி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தவேண்டியுள்ளதுடன் அதற்கான கால அவகாசமாக எதிர்வரும் 20ஆம் திகதி வரை சபையினை ஒத்திப்போடுமாறு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான தண்டாயுதபாணியினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி குழு தலைவர் எல்எம்.ஜெமிலும் வழிமொழிந்தார்.
இதனைத்தொடர்ந்து சில உறுப்பினர்கள் உரையாற்றியதை தொடர்ந்து சபை நடவடிக்கைகளை 20ஆம் திகதி ஒத்திவைப்பதாகவும் கிழக்கு மாகாணசபையின் வரவுசெலவுத்திட்டத்தினை அன்றைய தினம் புதிய அரசாங்கம் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் கிழக்கு மாகாணசபையின் கொரடா திருமதி ஆரியவது கலபதி கோரிக்கை விடுத்தார்.
கிழக்கு மாகாணசபையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கான சம்பளங்கள் வழங்கப்படவேண்டியுள்ளதால் இந்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் சபையினை ஒத்திவைப்பதற்கான உத்தரவினை விடுத்தார்.இதற்கு ஆளும் கட்சி எதிர்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.