சட்ட விரோதமான மதுபானம் விற்ற பெண் பிணையில் விடுதலை

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி வேலூர் பகுதியில் பூரணை தினத்தன்று சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்ட பெண்ணை பிணையில் செல்ல மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை கல்லடி வேலூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்ட விரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் பெண்னொருவர் கைதுசெய்யப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவான மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.

750மில்லி லீற்றர்களைக்கொண்ட 10போத்தல்களும் 180 மில்லி லீற்றர் கொண்ட 81 மதுபோத்தல்களுமாக 22080 மில்லி லீற்றர் மதுபானங்கள் கொண்ட போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வுத்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பூரணை தினங்களில் மதுபானம் விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.