பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் திவிநெகும பயனாளிகளை அறிவுறுத்தும் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் திவிநெகும தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளீர்க்கப்பட்டுள்ளவர்களை அறிவுறுத்தும் கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

வாழ்வின் எழுச்சி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கிராம மட்டத்தில் வறுமை ஒழிக்கும் வகையில் வருடாந்தம் பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு வாழ்வதார உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திவிநெகும பயனாளிகளுக்கான கூட்டம் கொக்கட்டிச்சோலை கருணாம்மான் கலாசார மண்டபத்தில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர்களான பொன்.ரவீந்திரன்,ருத்திரமலர் ஞானபாஸ்கரன்,திவிநெகும திணைக்களத்தின் பட்டிப்பளை பிரதேச முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கலைவாணி புவனேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பட்டிப்பளை பிரதேசத்தில் கிராமசேவையாளர் பிரிவில் 50பேர் வீதம் 24 கிராம சேவையாளர் பிரிவில் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 1200 பயனாளிகள் கலந்துகொண்டனர்.

வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்திட்டங்களை தமது வறுமையை ஒழிப்பதற்கு எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பது தொடர்பிலான கருத்துரைகள் வழங்கப்பட்டன.