பெண்கள் யுத்தமுனையில் உறுதியான மனநிலையுடன் இருந்து போராடியதுபோன்று நீங்கள் இன்று உங்கள் குடும்பத்துக்காக அதே உறுதியான மனநிலையுடன் உங்கள் வாழ்வினை முன்னேற்றிக்கொள்ள போராடவேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் திவிநெகும பயனாளிகளை அறிவுறுத்தும் கூட்டம் கருணாம்மான் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
திவிநெகும திட்டத்தினை சரியானமுறையில் கொண்டுசென்றால் வறுமையினை முற்றாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒழிக்கலாம்.
ஒரு குடும்பத்தினை வழிநடத்துபவர் தாயாகும்.பெண்கள் மத்தியில் முயற்சிகள் தோற்றம்பெறும்போது ஒரு சமூகத்தில் நல்ல மாற்றங்களை நாங்கள் அடையமுடியும்.
யுத்தத்தின்போது நேரடித்தாக்கங்களை அனுபவித்தவர்கள் பெண்களாவர்.அன்று தமிழ்,முஸ்லிம்,சிங்களவர் என்று யுத்தம் பெண்களை பார்க்கவில்லை.அனைத்து பெண்களும் இந்த யுத்தம் காரணமாக நேரடியான தாக்கங்களை அனுபவித்தவர்கள்.
பல இழப்புகளில் இருந்து,வேதனைகளில் இருந்து விடுபட்ட மக்கள் என்ற அடிப்படையில் இன்று மகிழ்வான வாழ்வினை நோக்கி எமது சமூகம் நகர்ந்துகொண்டுள்ளது. இன்று எமது மக்கள் வாழும் நிலை இன்றுதான் உருவாகியுள்ளது.இனி நாங்கள் என்ன செய்யவேண்டும் என சிந்திக்கவேண்டும்.
திவிநெகும திட்டத்தின் மூலம் உங்களின் வாழ்வின் வறுமையினை நீக்குவதற்காக இலவசமாக அனைத்தும் வழங்கப்படுகின்றன.அவற்றினை நீங்கள் முழுமையாக சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டும்.நாங்கள் வறுமையான நிலையில் இருந்து மீளவேண்டும்.நாங்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலையில் இருந்துவிடுபடவேண்டும்.
அந்தவகையில் பட்டிப்பளை பிரதேச மக்கள் வேகமாக முன்னேறிவருகின்றனர்.இந்த மக்களுக்கு தேவையான உதவிகளைப்பெற்றுக்கொடுக்கவேண்டும்.அதற்கு பக்கபலமாக எம்மிடம் இருக்கவேண்டும்.இது தொடர்பில் எமது மக்கள் சிந்திக்கவேண்டும்.எதிர்கட்சியில் இருந்துகொண்டு எமது மக்களுக்கு எதனையும் நாங்கள் செய்துவிடமுடியாது.
எதிர்கட்சிக்கு வாக்களிப்பதினால் உங்களுக்கோ,உங்கள் குடும்பத்துக்கோ எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை.இதனால் எமது சமூகத்துக்கும் எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை.
கடந்த காலத்தில் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கூறப்பட்டு நீங்களும் கண்களை மூடிக்கொண்டுவாக்களித்தீர்கள் அதனால் உங்களுக்கு உங்கள் பிள்ளைகளுக்கு வந்த நன்மையென்ன? நாங்கள் சிந்திக்கும் மக்களாக மாறவேண்டும்.
நீங்கள் வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தால் அங்கு நீங்கள் செல்லவேண்டியதில்லை.நீங்கள் அளிக்கும் வாக்கினால் எந்தவித நன்மையும் யாருக்கும் கிடைக்கப்போவதில்லை.
நீங்கள் முன்னேறினால் உங்கள் குடும்பம் முன்னேறும்.குடும்பம் முன்னேறினால் ஒரு கிராமம் முன்னேறும் ஒரு கிராமம் முன்னேறினால் ஒரு மாவட்டம் முன்னேறும் இதனை அடிப்படையாக வைத்தே எமது சமூகம் சிந்திக்கவேண்டும்.இதற்கு நல்ல உதாரணமாக எமது முஸ்லிம் சகோதரர்கள் உள்ளனர்.அவர்கள் அரசியல் ரீதியாக எடுக்கும் முடிவே அந்த சமூகத்தினை உயர்ந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது.அனைத்து வகையிலும் அந்த சமூகம் முன்னேறிவருகின்றது.கல்வியில் பொருளாதாரத்தில் என அனைத்து வகையிலும் அந்த சமூகம் முன்னோக்கிவருகின்றது.ஆனால் நாங்கள் இன்னும் பி;ன்னோக்கியே செல்ல நினைக்கின்றோம்.
இது தொடர்பில் அனைவரும் சிந்திக்கவேண்டும்.மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் அரசியல் ரீதியான ஒரு மாற்றம் ஏற்படும்போதே நாங்கள் கல்வியிலும் சரி பொருளாதாரத்திலும் சரி முன்னேறமுடியும்.அப்படியல்லாமல் இன்னும் நாங்கள் உரிமை,போராட்டம் என்ற வெற்றுவேட்டுகளை பேசிக்கொண்டிருப்பவர்களின் பின்னால் செல்வோமானால் எமது சமூகத்தின் எதிர்கால நிலை கேள்விக்குறியாகவே மாறும்.
நாங்கள் பிரச்சினைகளுக்குள் இருக்கும்போதே நாங்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்று உணரும்போதே எங்களுக்கு எதிர்க்கட்சிகள் தேவை.ஆனால் இன்று அந்த நிலைமைகள் இல்லாத நிலையில்.அனைவரும் சுதந்திரத்துடன் வாழும் நிலையில் எமக்கு எந்த எதிர்க்கட்சியும் தேவையில்லை.
எதிர்வரும் காலங்களில் படுவான்கரை பிரதேசத்தில் ஒரு அமைச்சரை உருவாக்குங்கள்.அவர் மூலம் உங்கள் பிரதேசங்களை அபிவிருத்திசெய்யமுடியும்.அதன் மூலமே எமது குழந்தைகளின் வளமான எதிர்காலத்தினை நோக்கி நாங்கள் செல்லமுடியும்.
எமது உழைப்பு எமக்கு பிரதானமாக இருக்கவேண்டும்.இலவசமாக கிடைப்பனவற்றை நாங்கள் நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும்.கடந்த காலத்தில் நாங்கள் பலவற்றினை இலவசமாக பெற்றுள்ளோம்.அவற்றினைக்கொண்டு யாராவது முதலாளியாக வந்துள்ளார்களா என்றால் யாரும் இல்லை.தினம் உழைப்பதை அன்றே முடித்துவிட்டு இருக்கும் நிலையே உள்ளது.சேமிப்பு என்பது எமது மக்களிடம் மிகவும் குறைவான நிலையிலேயே உள்ளது.
இந்த நிலையினை பெண்களாகிய நீங்கள் மாற்றவேண்டும். பெண்கள் யுத்தமுனையில் உறுதியான மனநிலையுடன் இருந்து போராடியதுபோன்று நீங்கள் இன்று உங்கள் குடும்பத்துக்காக அதே உறுதியான மனநிலையுடன் உங்கள் வாழ்வினை முன்னேற்றிக்கொள்ள போராடவேண்டும்.