கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் கிழக்கிலங்கை மனிதவள மேம்பாட்டு நிலையத்தினால் பெண்கள் தலைமை தாங்கும் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 25 குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பெண்கள் தலைமை தாங்கும் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் கரித்தாஸ் எகேட் நிறுவனத்தின் கிழக்கிலங்கை மனிதவள மேம்பாட்டு நிலையத்தினால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களின் தலைவர்களுக்கு ஒரு நாள் கொள்திறன் பயிற்சி வழங்கி வாழ்வாதார உதவி வழங்கப்பட்டு வருகின்றது.
கத்தோலிக்க நிவாரண சேவை நிதி உதவியுடன் ஏற்கனவே தலா 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவி 240 குடும்;பங்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் புதூர் மற்றும் சேற்றுக்குடா கிராமங்களைச் சேர்ந்த 25 குடும்பங்களுக்கு தலா 40 ஆயிரம் பெறுமதியான வாழ்வாதார உதவி(ஒரு மில்லியன் பெறுமதியான)வழங்கப்பட்டது.
குறித்த 25 குடும்பங்களின் தலைவர்களுக்கு கொள்திறன் பயிற்சி நேற்றுக் காலை முதல் பிற்பகல் 3.00 மணி வரை வழங்கப்பட்டதுடன் மாலை வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.
கரிதாஸ் எகேட் நிறுவன இயக்குநர் அருட்தந்தை ஜிறோன் டிலிமா தலைமையில் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்ற வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா பிரதம அதிதியாகக் கலந்தகொண்டு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கரித்தாஸ் எகேட் நிறுவன ஆளணி முகாமையாளர் கிஞ்சிலி வாத்லட்,திட்ட இணைப்பாளர் எஸ்.பத்மநாதன், கிராம சேவையாளர் எஸ்.பிரதீபா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் து.சோதீஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.