மட்டக்களப்பில் 'பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம் என்பதுடன், முறைசாராப் பொருளாதாரங்களில் பெண்களின் பங்கை அங்கீகரித்தல்' கொள்கை வெளியீடு

பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம் என்பதுடன்,  முறைசாராப் பொருளாதாரங்களில் பெண்களின் பங்கை அங்கீகரித்தல்' எனும் கொள்கை வெளியீடு ஒன்று முதற்தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (25) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் மேற்படி கொள்கை வெளியீடு  வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் இணைப்புக்குழு உறுப்பினர் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பாஸ்கரன், கண்டியைச் சேர்ந்த  செங்கொடி பெண்கள் இயக்கத்தின் ஸ்தாபகர் மேனகா கந்தசாமி உள்ளிட்ட  முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது 'பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம் என்பதுடன், முறைசாராப் பொருளாதாரங்களில் பெண்களின் பங்கை அங்கீகரித்தல்' எனும் கொள்கை வெளியீட்டின் முதற்பிரதி மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பாஸ்கரனுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வெளியீடானது முறைசாராப் பொருளாதாரங்களில் ஈடுபடும் பெண்களின் உரிமைகளுக்காக கூட்டாக தயாரிக்கப்பட்ட கொள்கை குறிப்பின் வெளியீடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.