மூங்கிலாறு நிர்மாணப்பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதியமைச்சர் முரளிதரன் பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் பிரசேத்தில் வெள்ளத்தால் முற்றாக சேதமடைந்த மூங்கிலாறு பாலம் அமைப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.
அப்பகுதிக்கு சென்ற மீள்குடியேற்ற பிரதியமைச்சர் பாலத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

மூங்கிலாறு ஊடாக பாலம் இல்லாத காரணத்தினால் இப்பகுதி ஊடாக பயணிப்போர் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவந்தனர்.

மண்டூர் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துக்குரிய பாலமான  மூங்கிலாறு பாலம் சேதமடைந்ததால், அப்பகுதி விவசாயிகள் உட்பட சகலரும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில் மீள்குடீயேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பஸில் ராஜபக்ஸவின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து இதற்கான பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

கிராமிய வீதிகள் பாலங்கள் நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் இதன் நிர்மாணப்பணிக்கு 30 மில்லியன் ரூபா ஒதுக்கீஷடுசெய்யப்பட்டு கடந்த ஆண்டு முதல் இதன் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் இந்த பாலத்தின் நிர்மாணப்பணிகள் துரிதமாக இடம்பெற்றுவருகையில் அப்பகுதிக்கு சென்ற பிரதியமைச்சர் பாலத்தின் நிர்மாணப்பணிகளை பார்வையிட்டார்.

மழை காலம் ஆரம்பிக்க முன்னர் பாலத்தின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த பாலம் அமைக்கப்படாத காரணத்தினால் மண்டூர் ஊடாக காக்காச்சிவட்டை, சின்னவத்தை,பலாச்சோலை,ஆனைகட்டியவெளி ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்தில் ஈடுபடுவோர் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது.

சாதாரண நாட்களில் ஆற்றினை இலகுவில் கடந்து செல்லக்கூடியதாக உள்ளபோதிலும் மழைகாலங்களில் ஏற்படும் வெள்ள நிலைமைகளினால் இந்த ஆற்றினூடாக பயணிக்கமுடியாத நிலையே உள்ளது.