வடகிழக்கில் வீடுகள் புனரமைப்புக்கு 100 கோடி ரூபா ஒதுக்கீடு-மீள்குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதரன்

வடக்கு கிழக்கில் யுத்தம் மற்றும் வன்முறையினால் சேதமடைந்த வீடுகளை திருத்தும்வகையில் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் புனர்வாழ்வு புனரமைப்பு அதிகாரசபை மூலம் 100 கோடி ரூபாவினை ஜனாதிபதி ஒதுக்கீடுசெய்துள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

வன்செயல்கள் மற்றும் யுத்தத்தினால் சேதமடைந்த வீடுகளை திருத்தியமைக்கும் திட்டத்தின் கீழ் புனர்வாழ்வு புனரமைப்பு அதிகாரசபையினால் வவுணதீவில் ஐம்பது வீடுகள் புனரமைக்கப்படவுள்ளன.

வவுணதீவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு வவுணதீவு பிரதேச செயலகத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் தவராசா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் புனர்வாழ்வு அபிவிருத்தி புனரமைப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் பதுருதீன்,மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,மீள்குடியேற்ற அதிகாரசபையின் பணிப்பாளர் சத்தியவரதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட காந்திபுரத்தினை சேர்ந்த ஐம்பது குடும்பங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபா வீதம் இந்த இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

இக்கிராமத்தில் வீடுகளை திருத்தியமைப்பதற்காக ஐம்பது இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு அபிவிருத்தி புனரமைப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் பதுருதீன் தெரிவித்தார்.