பாராளுமன்றம் 18 முதல் 21 வரை கூடும் என செயலாளர் நாயகம் அறிவிப்பு


பாராளுமன்றம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் பிரகாரம் பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல்  10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும் 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன்  11.00 மணி முதல்  11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  11.30 மணி முதல் மாலை  5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2496/38ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தலினால் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மறுநாள் 19ஆம் திகதி புதன்கிழமை 11.30 மணி முதல்  5.00 மணி வரை நிதிச்சட்டத்தின் கீழான தீர்மானம் குறித்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 5.00 மணி முதல்  5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை 11.30 மணி முதல் 5.00 மணி வரை பெண்களையும் இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் (திருத்தச் சட்டமூலம்) இரண்டாவது மதிப்பீட்டுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மாலை 5.00 மணி முதல்  5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மறுநாள் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை 11.30 மணி முதல் 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.