முச்சக்கரவண்டி டிப்பர்ருடன் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் பலி!

பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதியின் புனானை பகுதியில், மட்டக்களப்பு திசை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று (01) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, பின் இருக்கையில் பயணித்த பெண் மற்றும் இருவர் வெலிக்கந்த மற்றும் வாழைச்சேனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களில் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது. 

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனமும் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அதன் சாரதி காயமடைந்து வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் குறித்து வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.