மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவர் மர்மாக உயிரிழந்த நிலையில் இன்று திங்கட்கிழமை பகல் 12.00 மணியளவில் மீட்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.
செங்கலடி கணேச கிராமத்தைச் சேர்ந்தவரும் ஏறாவூர் பகுதியில் தங்க ஆபரண கடையில் ஒன்றில் வேலை செய்து வருபவருமான 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரது தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் வேலை செய்துவருவதாகவும் சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.
இந்த நிலையில் சவுக்கடி கடற்கரை பகுதியில் இன்று திங்கட்கிழமை ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொது மக்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு தடவியல் பிரிவு பொலிஸார் அழைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்ததுடன் உயிரிழந்தவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.