கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை இயற்கை எய்தினார்.
அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை காலை அஞ்சலிக்காக கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் அன்னாரின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு மாலை 4 மணிக்கு மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறவுள்ளது.
வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா அவர்கள் மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு ஜப்பசி மாதம் 14ம் திகதி பிறந்ததுடன் கல்லடி பகுதியினை நிரந்தர வசிப்பிடமாக கொண்டிருந்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்விமானிப் பட்டத்தினைப் பெற்ற பின்னர் குருநாகல், இரத்மலானை இந்து கல்லூரி போன்ற பாடசாலையில் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றினார். சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபராகவும் கொத்தணி அதிபராகவும் கடமையாற்றிய இவர். தேசிய கல்வி நிறுவனத்தின் அதிபர்களை பயிற்றுவிக்கும் செயற்திட்ட அதிகாரியாகவும் தமிழ் பிரிவின் பணிப்பாளராக கடமை ஆற்றியிருந்தார்.
இங்கிலாந்தின் லீச் பல்கலைக்கழகத்தில் கல்வி முகாமைத்துவ துறையில் முதுமாணிப் பட்டத்தினை பெற்றவர். ஆரம்பம் முதல் கல்வி முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பான ஆர்வம் கொண்டிருந்த இவர் கல்வி முகாமைத்துவத்திறனை முன்பள்ளி அபிவிருத்திக்காக செலவிட்டிருந்தார். அதன் பின்னர் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் கல்வி தொடர்பான புலமை பெற்ற பின்னர் இஸ்ரேல் நாட்டின் உலகளாவிய பிரம்மிக்கத்தக்க வளர்ச்சியினை அவதானித்த இவர். அந்நாட்டின் கல்வி முறையினை இலங்கையில் பிரயோகிப்பது தொடர்பாக ஆர்வம் காட்டி இருந்தார்.
அதன் அடிப்படையில் இஸ்ரேல் நாட்டின் முன் பிள்ளை கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ச்சியினை அந்நாட்டில் மேற்கொண்டு அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் முன் பிள்ளைப் பருவ கல்வி அபிவிருத்தி தொடர்பாக இலங்கைக்கு பொருத்தமான நிகழ்ச்சி திட்டத்தினை தயாரித்து அதனை இலங்கையில் பிரயோகிப்பதற்கு எடுத்த முயற்சியின் பலனாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையின் ஊடாக அப்பணியினை கிழக்கு மாகாண முன் பள்ளிகளில் பிரயோகித்தார்.
1998 ஆம் ஆண்டு கால பகுதியில் இருந்து கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக இணைந்திருந்தார். அதன் அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் ஊடாக கல்வி முதுமாணி பட்டம் கல்வியியலில் இளமானி பட்டக் கற்கை நெறிகளை உருவாக்கினார். முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை மாகாணத்தின் வழங்கி சகல முன்பள்ளி ஆசிரியர்களுக்குமான சான்றிதழ் மற்றும் டிப்ளமோ சான்றிதழ் வழங்குவதற்கு வித்திட்டிருந்தார்.
1978 ஆம் ஆண்டு கால பகுதியில் இருந்து கிராமிய கல்வி வளர்ச்சியின் நோக்கமாக கொண்டிருந்த அவர் படித்த இளைஞர்களை ஒன்று திரட்டி கிராமிய மட்டத்தில் கல்வியை மேம்படுத்தும்முகமாக ஒளிக் கல்லூரி என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதனுடாக மாணவர்கள் இலவசமாக கல்வி பயில கூடிய வசதியினை ஏற்படுத்தி இருந்தார், தொடர்ந்து பல்கலைக்கழகத்தில், முன்பள்ளி பருவ அபிவிருத்தி நிலைய ஸ்தாபகராகவும் பணிப்பாளராகவும் செயற்பட்டார். அன்னார் அதிபராக ஆசிரியராக சிரேஷ்ட விரிவுரையாளராக பீடாதிபதியாக இருந்த இவர் தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக, அதிமேதக ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டார்.
வாழ்க்கை முழுவதும் கல்வி அபிவிருத்தி என்ற சிந்தனையை அடிப்படையாகக் கொண்டிருந்தமை, அவரது கல்விச் சிந்தனையின் தேசிய ரீதியாக கல்வியில் காத்திரமான பங்கினையும் மாற்றத்தினை வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.