மறைந்த ஆயரின் நல்லடக்கம் புதன்கிழமை


மறைந்த மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் அடக்கம் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (19) திகதி தனது 74 வது வயதில் இறையடி சேர்ந்துள்ளார்.
அன்னாரின் திருவுடல் மக்களின் அஞ்சலிக்காக தன்னாமுனை தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளைய தினம் வழிபாடுகளை தொடர்ந்து மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
நாளை மறுதினம் புதன்கிழமை ஆயரின் திருவுடல் ஆலய வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கலாநிதி யோசப் பொன்னையா ஆண்ட இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, தன்னாமுனை என்ற ஊரில் 1952 அக்டோபர் 12 ஆம் திகதி பிறந்துள்ளார்.
அன்னார் புனித வளனார் சிறிய குருமடத்திலும், திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி கற்று, திருச்சிராப்பள்ளி புனித பவுல் குருமடத்தில் உயர் கல்வி கற்று மெய்யியலில் இளங்கலைப் பட்டமும், புனேயில் உள்ள தேசிய குருமடத்தில் பயின்று இறையியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.
அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டதாரியுமான இவர் ரோம் மறைமாவட்ட நகரப் பல்கலைக்கழகத்தின் விவிலிய இறையியல் பட்டமும் (1993), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
யோசப் பொன்னையா 1980 ஏப்ரலில் கத்தோலிக்க அருட்தந்தையாக பணியிலமர்த்தப்பட்டார். இவர் பங்கு தந்தையாக மட்டக்களப்பு தூய மரியாள் இணைப்பேராலயம் (1980-82), வாகரை, வீச்சுக்கல்முனை, ஆயித்தியமலை ஆகியவற்றில் பணியாற்றினார்.
மட்டக்களப்பு புனித வளனார் சிறிய குருமடத்திலுல் பணிப்பாளராகப் (1993-96) பணியாற்றிய பின்னர் அம்பிட்டி தேசிய குருமடத்தில் (1996-2001) பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
2001-06 காலப்பகுதியில் தாண்டவன்வெளி பங்கு தந்தையாக பணியாற்றிய பின்னர் 2006 இல் திருகோணமலை - மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பதில் பொருப்பாளராகப் பதவியேற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
2008 பெப்ரவரியில் திருகோணமலை - மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் துணை - ஆயராக நியமிக்கப்பட்டு, 2008 மே மாதத்தில் அதன் ஆயராகப் பதவியேற்றார்.
அதன் பின்னர் 2012 இல் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டதுடன் மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தே முதன் முறையாக தெரிவு செய்யப்பட்ட ஆயராக இவர் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.