பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கொக்கட்டிச்சோலைதான்தோன்றீச்சரம் கொடியேற்றம்


இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்ரீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று(04) அதிகாலை ஆயிரக்கணக்கான அடியார்கள் சூழ கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாகவும், தானாக தோற்றம்பெற்ற ஆலயமாகவும், கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரம் விளங்கி வருகின்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இந்த மஹோற்சவ கிரியைகள் ஆரம்பமானது.
மூலமூர்த்திக்கு அபிஷேக பூசையுடன் விசேட பூசை இடம்பெற்றதனைத் தொடர்ந்து கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தினை சூழ வலம்வந்து கொடிச்சீலைக்கு விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் வேதபாராயணத்துடன் மேள நாதஸ்வர இசை முழங்க மணியோசைகளின் மத்தியில் பக்தர்களின் அரோகரா ஓசையுடன் கொடியேற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
விவசாயிகள் நிரம்பிய படுவான்கரை மண்ணின் மகத்துவத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் நெற்கதிர்களால் பின்னப்பட்ட கொடிச்சீலை கயிறுகள் கொண்டு கொடியேற்றம் நடைபெற்றமை இந்த ஆலயத்திற்கு மட்டும் உள்ள சிறப்பாகும்.
இதனையடுத்து தம்பத்துக்கு விசேட அபிஷேகம் இடம்பெற்றதுடன் பூசைகள் இடம்பெற்று சுவாமி உள்வீதி வலம்வரும் நிகழ்வு இடம்பெற்றது.
கிழக்கின் தேரோடும் கோயில் என்னும் பெருமையினையும் கொண்ட ஆலயத்தின் தேரோட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 22ம் திகதி நடைபெறவுள்ளதுடன் 23ம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.