ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன.ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு புனித செபஸ்தியான் பேராலயத்தில் இன்றைய தினம் ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான விசேட திருப்பலி பூஜையும் நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.
ஆலயத்தின் பங்குத்தந்தை அனஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில் அருட்தந்தை நவரெட்னம் நவாஜி அடிகளார்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களின் ஆதம்சாந்திக்கான விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டுவர விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆலய முன்றிலில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின்போது உயிர்நீர்த்தவர்களின் உருவப்படம் தாங்கிய பதாகை வைக்கப்பட்டு அதற்கு முன்பாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பொதுமக்கள்,அருட்சகோதரிகள்,ஆலய பங்குமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.