உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு : பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு


2023 க.பொ.த. உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு கடந்தாண்டு வழங்கப்பட்ட 2,000 ரூபா இந்தாண்டும் வழங்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அனைத்து மதிப்பீட்டு நிலையங்களின் மதிப்பீட்டாளர்களுக்கும் அறிவிக்க பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் நேற்று (02) கல்வி அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக மதிப்பீட்டு பரிசோதகர்களுக்கு தெரிவித்ததையடுத்து, அவர்கள் விடைத்தாள் மதிப்பீட்டுக்கு மீண்டும் செல்லவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்  பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். கடந்தாண்டு வழங்கப்பட்ட 2,000 ரூபா உதவித்தொகை 1,450 ரூபாயாக குறைக்கப்பட்டதாலேயே விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியிலிருந்து ஆசிரியர்கள் விலக முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.
எனினும், க.பொ.த. உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவை 1,450 ரூபாவாக குறைப்பதற்கான எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லையென்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த வருடம் 2,000 ரூபாவை வழங்கிவிட்டு அதனை இவ்வருடம் குறைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லையென்றும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.