யானை தாக்கி வயோதிபர் பலி

திருகோணமலை – கிண்ணியா, வான் எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செம்பி மொட்டை காட்டுப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (21)  யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய எம்.எஸ்.முஹமட் யாகூப் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செம்பி மொட்டை அரசுக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது, யானை தாக்கியதாக தெரியவந்துள்ளது.

மேலும், தடை செய்யப்பட்ட காட்டுப் பகுதிக்குள் சென்று மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது யானை தாக்கி விழுந்து  கிடந்துள்ளார். அந்த இடத்துக்கு அருகில் உள்ள வயல் உரிமையாளரான அவரது மகன், தந்தையை தூக்கிக் கொண்டுவந்து யானை மின் வேலிக்கு அருகில் கொண்டு வரும்போது தந்தை உயிரிழந்துவிட்டார் என   பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வான்எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.