கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து கலந்துரையாடல்


இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் அறிவுறுத்தும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் ஏற்பாட்டில் இது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு மன்றேசாவில் நடைபெற்றது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிரேஸ்ட சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பவானி பொன்சேகா,மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளர் இஸ்ஸடீன் உட்பட பலர் கலந்தகொண்டனர்.


இந்த நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்,ஊடகவியலாளர்கள்,மதத்தலைவர் என பல்வேறு தரப்பினரும் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

இதன்போது அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் பல்வேறு கருத்துரைகள் வழங்கப்பட்டன.

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டங்கள் தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மதத்தலைவர்கள்,ஊடகவியலாளர்களின் கருத்துகள் இதன்போது பெறப்பட்டது.

அத்துடன் இந்த சட்டத்தினால் சிறுபான்மை சமூகம் எதிர்கொள்ளும் பாதிப்புகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் இந்த சட்ட மூலத்தினை நிறைவேற்றாமல் தடுப்பதற்கு முன்னெடுக்கவேண்டிய வழிவகைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

இது தொடர்பில் வடகிழக்கு மற்றும் தெற்கு இணைந்ததான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.