மு.பா.உ ஜோசப்; படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விடுதலைசெய்யப்பட்டவர் திடீர் மரணம்

மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த கஜன் மாமா என்றழைக்கப்படும் ரங்கசாமி கனகநாயம்  மாரடைப்பால் வியாழக்கிழமை (05) அதிகாலையில் உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 56 ஆகும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டு தேவாலயத்தில்   2005 ம் ஆண்டு டிசெம்பர் 25 ம்திகதி ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து ரி.எம்வி.பி கட்சியுடன் இணைந்து செயற்பட்டுவந்த   கஜன்மாமா மற்றும் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் உட்பட 5 பேரை கடந்த 2015 கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்  2019 ம் ஆண்டு  குறித்த வழக்கில் இருந்து அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது

இந்த நிலையில் உயிரிழந்த கஜன்மாமா மட்டக்களப்பு 5ம் ஒழுங்கை நாவற்குடாவில் வசித்துவந்த நிலையில் சம்பவதினமான வியாழக்கிழமை (05) அதிகாலை 1 மணியளவில் வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் உயிரிழந்தவரின் சடலம் பிரோத பரிசோதனைக்காக மட்டு போதனாவைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.