மட்டு செட்டிபாளையம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு ஒருவருக்கு காயம்


களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததோடு முச்சக்கர வண்டி சாரதி  காயடைந்துள்ளார்.

களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி கல்முனை மட்டக்களப்பு பிரதான சாலை வழியே செட்டிபாளையம் பகுதி ஊடாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியானது செட்டிபாளையம் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் பயணித்துக்கொண்டிருந்த போது நிலை தடுமாறி வீதியோரமிருந்த மின்சாரத்தூணில் மோதுண்டு தூக்கி வீசப்பட்டு வீதியோரமாக நின்றுகொண்டிருந்தவர் மேல் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் வீதியோரம் நின்றுகொண்டிருந்த செட்டிபாளையத்தை சேர்ந்த 70 வயதான பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு இவ் விபத்தில்  முச்சக்கர வண்டியை செலுத்திவந்த எருவில் பகுதியை சேர்ந்த இந்துமத குரு ஒருவருக்கும் காயமேற்பட்டுள்ளதோடு வைத்திய சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துச் செல்கின்றனர்.