கெக்கிராவ பிரதேசத்தில் பியர் அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லூரி ஒன்றிற்கு முன்பாக பிரதான வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கெக்கிராவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் குறித்த மாணவி மீது சந்தேகம் அடைந்து மாணவியை தங்கள் பொறுப்பில் எடுத்தனர்.
பின்னர், குறித்த மாணவி கெக்கிராவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் அழைத்து வந்து ஒப்படைத்த பின்னர், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவி எப்படி மது அருந்தினார் என்பது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, சிறுமியின் தாயின் இரண்டாவது கணவனின் தந்தை தனக்கு பியர் குடிக்க கற்றுக் கொடுத்ததாக சிறுமி கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கெக்கிராவ பொலிஸார், கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தின் நன்னடத்தை அலுவலகத்திற்கு அறிவித்ததையடுத்து, சம்பவம் தொடர்பில் தனியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறுமி பியர் குடித்து பாடசாலைக்கு வந்தது ஏன், அவரை பியர் குடிக்க வைத்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
