போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உதவியுடன் மட்டக்களப்பில் பொது இடங்களை கண்காணிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளரும் மட்டக்களப்பு,கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க தலைவருமான வி.வாசுதேவன் தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற தேசிய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு,தேசிய தமிழ் தினபோட்டி மற்றும் மாகாண மட்ட போட்டிகளில் சாதனை படைத்த மட்டக்களப்பு,கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இராம கிருஸ்ண மிசனில் பொது மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜி மகராஜ் மகராஜினால் வழிபாடுகள் நடாத்தப்பட்டு சாதனையாளர்களுக்கு ஆசிகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து மிசனிலிருந்து மாலைகள் அணிவிக்கப்பட்டு பாடசாலை வரையில் பேண்ட் வாத்தியங்களுடன் மாணவர்கள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.
அதனை தொடர்ந்து பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் அதிபர் சுவர்ணேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளரும் மட்டக்களப்பு,கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க தலைவருமான வி.வாசுதேவன் கலந்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் மல்யுத்த போட்டியில் ஒரு தங்கம்,இரண்டு வெள்ளி,ஒரு வெண்கலப்பதக்கத்தினை தேசிய ரீதியான போட்டியில் வெற்றிபெற்று பெற்றுக்கொண்ட மாணவர்கள்,தேசிய தமிழ் மொழி தினம் மற்றும் கிழக்கு மாகாண பாடசாலை மட்டப்போட்டிகளில்வெற்றிபெற்ற மாணவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் மல்யுத்தப்போட்டியில் தேசிய சாதனை படைப்பதற்கு உறுதுணையாகயிருந்த சாண்டோ விளையாட்டுக்கழக தலைவரும் மல்யுத்த பயிற்றுவிப்பாளரும் ஆசிரியருமான திருச்செல்வம் மற்றும் தேசிய தமிழ்தின போட்டியில் மாணவர்கள் வெற்றிவாகைசூடுவதற்கு காரணகர்த்தாவாகயிருந்த சங்கீத ஆசிரியை திருமதி ஜெயஷி கலிங்கேஸ்வரன் மற்றும் ஏனைய பிரிவுகளில் மாணவர்களை வழிநடாத்திய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர்,
எப்போதும் பாடசாலையொன்று தலை நிமிர்ந்து நிற்பதற்கு அந்த பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்த பாடசாலை சமூகம் மிகமுக்கியமானது.அந்த சமூகத்தில் உள்ள ஆற்றல்கள்,நிதிகள்,பலத்தினை சரியாக பயன்படுத்தும்போது அந்த பாடசாலை தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இன்று மாணவர்கள் மத்தியில் பல்வேறான பிழையான செயற்பாடுகள் வெவ்வோறு குழுக்கல் ஊடாக புகுத்தப்பட்டுவருகின்றது.போதைப்பொருளின் ஆதிக்கம் அதிகரித்துவருகின்றது.
இந்த போதைப்பொருள் என்பது மனிதனை இரு ஆண்டுக்குள் அழித்துவிடக்கூடியது.சிந்தனையாற்றலை குறைத்து,மனிதனின் உடல் செயற்பாடுகளை நிறுத்திவிடும்.இவற்றிலிருந்து நாங்கள் விலகியிருக்கவேண்டும்.இவ்வாறான செயற்பாட்டை தடுப்பதற்கு பாடசாலை சமூகம் எங்களுக்கு உறுதுணையாகநிற்கவேண்டும்.
நாங்கள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உதவியுடன் ஒவ்வொரு பொது இடங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றோம்.மாணவர்கள் மிகவும் கவனமாகயிருக்கவேண்டும்.இதில் ஒரு மாணவன் அல்லது வேறுஒருவர் சிக்குவரானால் அவருக்கு எந்தவித பிணையும் வழங்கப்படமாட்டாது.அவர்களை கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.
நாங்கள் நேற்றும் கடற்கரைப்பகுதிகளை சுற்றிவளைத்திருந்தோம்.இதன்போது 20க்கும் மேற்பட்டவர்கள் பிடிக்கப்பட்டனர்.அவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இன்றைய நிலையில் போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுப்பதற்கு அனைவரும் இணைந்துபாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.