தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பட்டு சபை பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து "போதைப்பொருள் அற்ற சமூகம்" எனும் தொனிப்பொருளில் மாவட்டம் மற்றும் பிரதேச செயலக ரீதியில் சமூகம் சார் பாதுகாப்பு முறைமை தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பட்டு சபை மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தல் தொடர்பாக கிராம மட்டத்தில் கடமையாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்களை நடாத்தி வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பட்டு பிரிவின் ஒழுங்கமைப்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் டேபோ மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஆர்.சியாவுல் ஹக், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜ சரவணபவன், பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள், மதுவரி திணைக்கள அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுதாய சார் சீர்திருத்த திணைக்கள உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள், மதத்தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
