காணாமல் போன வாழைச்சேனை மீனவர்கள் 64 நாட்களின் பின்னர் அந்தமான் தீவில் கண்டுபிடிப்பு!!


கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆழ்கடலுக்குச் சென்று காணாமல் போன வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் அந்தமான் தீவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

காணாமல் போன மீனவர்கள் தொடர்பான தகவல் 64 நாட்களின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 4.30 மணியளவில் கிடைத்துள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அந்தமான் தீவிலிருந்த தமது தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்ததாகவும் அதில், மீனவர்கள் படகுடன் மீட்கப்பட்டு தற்போது கடல் பாதுகாப்பு படையின் பாதுகாப்பில் இருப்பதாகவும் தமக்கு தகவல் கிடைத்ததாக காணாமல் போன மீனவர் உமர்தீன் அசன் அலி என்பவரின் மகன் முஜாஹித் கூறினார்.

குறித்த தகவல் தொடர்பில், மீனவர் சங்கம் மற்றும் துறைமுக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் முஜாஹித் மேலும் தெரிவித்தார்.