பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகிறோம் : பதில் முதல்வர் சத்தியசீலன்

 

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களின் வரிப்பணம் முறையாக மக்களுக்கே சென்றடைய வேண்டும்  எனும் நோக்கில் ஊழல் அற்ற முறையில் நேர்த்தியாக அபிவிருத்தி பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையானது முன்னெடுத்து வருவதாக பதில் முதல்வர் க. சத்தியசீலன் தெரிவித்துள்ளார். 

"எழுச்சி மிகு" மாநகரம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட திராய்மடு இரண்டாம் வட்டாரத்திற்குட்பட்ட பனிச்சையடி  'ஐ' வலய இரண்டாம் குறுக்கு வீதியினை தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணியினை இன்று (19) ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மாநகர சபையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பொறுப்பேற்ற காலம் தொடக்கம் பல்வேறு அபிவிருத்தி பணிகளை வெவ்வேறு திட்டங்களின் ஊடாக செயற்படுத்தி வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக தற்போது மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களின் வரிப்பணம் முறையாக மக்களுக்கே சென்றடைய வேண்டும்  எனும் நோக்கில் ஊழல் அற்ற முறையில் நேர்த்தியாக அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகிறோம். 

இதேபோல் எதிர்வரும் காலங்களிலும் மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்த அவர் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்கிவரும் அனைத்து தரப்பினருக்கும் முதல்வர் உள்ளிட்டவர்களின் சார்பில் தாம் நன்றிகளை கூறிக் கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.

மேற்படி வீதியானது மட்டக்களப்பு மாநகர சபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியின் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபையின் 02ம் வட்டார உறுப்பினர் திருமதி பற்றிமா பால்தசார் அவர்களின் பாதீட்டு முன்மொழிவுக்கு அமைய 2 மில்லியன் ரூபா செலவில் 4 மீற்றர் அகலமும்  220 மீற்றர் நீளமும் கொண்ட வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

குறித்த அபிவிருத்தி பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையின் பதில் முதல்வர் கந்தசாமி சத்தியசீலன்,  மாநகர சபையின் உறுப்பினர்களான  திருமதி பற்றிமா பால்தசார், சீ.ஜெயந்திரகுமார், பு.ரூபராஜ். மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் டி.ஜே.கிறிஷ்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.