"எழுச்சி மிகு" மாநகரம் திட்டத்தின் கீழ் பணிச்சையடி முதலாம் குறுக்கு வீதி அபிவிருத்தி செய்யும் பணி ஆரம்பம்!!


"எழுச்சி மிகு" மாநகரம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பணிச்சையடி முதலாம் குறுக்கு வீதியினை தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியின் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபையின் 02ம் வட்டார உறுப்பினர் செல்வி.தாயளகுமார் கௌரி அவர்களின் பாதீட்டு முன்மொழிவுக்கு அமைய 2 மில்லியன் ரூபா செலவில் குறித்த வீதியானது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

பல ஆண்டு காலமாக குன்றும் குழியுமாக கவனிப்பார் அற்று காணப்பட்ட இவ்வீதியானது சுமார் 220 மீற்றர் நீளத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

மேற்படி வீதியின் அபிவிருத்தி பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையின் பதில் முதல்வர் கந்தசாமி சத்தியசீலன், மாநகர சபையின் உறுப்பினர்களான செல்வி. தாயளகுமார் கௌரி, அந்தோணி கிருரஜன், மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் டி.ஜே.கிறிஷ்டிராஜ் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

2018 ஆம் ஆண்டு மாநகர சபையினை தாம் பொறுப்பேற்ற காலம் தொடக்கம் பல்வேறு அபிவிருத்தி பணிகளை வெவ்வேறு திட்டங்களின் ஊடாக செயற்படுத்தி வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக மக்களின் வரிப்பணம் மக்களுக்கே சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் தற்போது மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது பதில் முதல்வர் க.சத்தியசீலன் கருத்து தெரிவித்தார்.