வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியுஆர் சிஸ்டத்தின் ஊடாக வாகன இறுதி இலக்கத்தின் அடிப்படையில் சுமூகமாகவும் நேர்த்தியான முறையிலும் பெற்றோல் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் உத்தியோகத்தர்களின் கியுஆர் பரிசோதனை உதவியுடன் அக்கரைப்பற்று பொலிசாரின் ஒத்துழைப்போடு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர் உள்ளிட்ட ஊழியர்களால் பெற்றோல் விநியோகம் சீரான முறையில் வழங்கப்பட்டு வருகின்றது.
ஆகஸ்ட 01ஆம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் கியுஆர் சிஸ்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் தற்போது இடம்பெற்றுவரும் கியுஆர் சிஸ்ட நடைமுறை வெற்றியளித்துள்ளதுடன் இதன்; மூலம் சீரான முறையில் முறைகேடுகள் இன்றி பெற்றோல் விநியோகம் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் இருந்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இருந்தபோதிலும் சிலகுறைபாடுகள் உள்ளதுடன் 01ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து குறைபாடுகளும் நிவர்த்திக்கப்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பனங்காடு இராசமணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை அமைதியான முறையில் பெற்றோல் விநியோகம் ஆரம்பமான நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும் கூட்டுறவு சங்க ஆணையாளரின் அறிவறுத்தலுக்கு அமைய ஜெனரேட்டர் வசதியுடன் மக்கள் நலன் கருதி பெற்றோல் வழங்க எரிபொருள் நிரப்பு நிலைய நிருவாகம் நடவடிக்கை எடுத்தமை சிறப்பாக அமைந்தது.
எவ்வித தடைகளுமின்றி மிகவும் சீரான முறையில் 3 4 5 வாகன இறுதி இலக்கத்தினையுடைய வாகனங்களுக்கு எரிபொருள்; வழங்கப்பட்டதை காண முடிந்தது.
இதேநேரம் பெண்களுக்கும் மதகுருமாருக்கும் ஒரு வரிசை எனவும் பெற்றோல் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
குறித்த எரிபொருள் நிலையங்களுக்கு வழங்கி வைக்கப்படும் பெற்றோலை பிரித்து வழங்க கூடிய வாகனங்களுக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கி சிறந்த முன்னெடுப்பை எரிபொருள் நிரப்பு நிலைய நிருவாகங்கள் எடுத்திருந்தமை சிறப்பாக அமைந்தது.
மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு 1500 ரூபா வீதமும் ஆட்டோவிற்கு 2000 ரூபாவிற்கும் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு 7000 ரூபா வீதமும் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றது.
இதேநேரம் கியுஆர் பெறமுடியாத பொதுமக்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.