மட்டக்களப்பில் மாநகர சபையால் மின் தகனசாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் நீண்டகால தேவையாக இருந்து வந்த மின் தகனசாலைக்கான அடிக்கல் இன்று (01) திகதி நாட்டப்பட்டு அதற்கான வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையினாலேயே குறித்த மின் தகனசாலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வானது இன்றைய தினம் (01) புதன் கிழமை காலை 10.30 மணியளவில் கள்ளியங்காடு இந்து மயான வளாகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன் ஆகிய இருவரும் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் விசேட அதிதியாகவும் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டியிருந்தார்கள்.

மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள், மாநகர சபையின் ஆணையாளர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.கலாரஞ்சினி, பிராந்திய சுகாதார பணிமனையின் உயரதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பல சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.