மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளராக இராஜதுரை ஹரிஹரன் நியமனம்!!


மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளராக இராஜதுரை ஹரிஹரன் கடந்த 26.04.2022 திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தனது கடமையினை பெறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

1994 ஆம் ஆண்டு இலங்கை விவசாய சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, திருகோணமலை மாகாண விவசாயத்திணைக்களத்தின் உதவி விவசாயப்பணிப்பாளராக கடமையேற்றுக்கொண்டார்.

பின்னர் 1998 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்திலும் 2001 ஆண்டு முதல் வவுனியா மாவட்டத்திலும் உதவி விவசாயப்பணிப்பாளராகவும் பிரதிப்பணிப்பாளராகவும் கடமையாற்றியுளார்.

2008 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளராக நியமனம் பெற்று, மீண்டும் திருகோணமலையில் கடமை புரிந்துள்ளார்.

2010 ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதி விவசாய பணிப்பாளராகவும், அதனைத் தொடர்ந்து மீண்டும் 2014 ஆண்டு திருகோணமலை விவசாயப்பணிமனையில் மாகாண பிரதி பணிப்பாளராகவும், மேலதிக மாகாணப் பணிப்பாளராகவும் கடமை புரிந்து வந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய பணிப்பாளராக கடமையினை பொறுப்பேற்றுள்ளார்.

மட்டக்களப்பு வந்தாறுமுலையை பிறப்பிடமாக கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியினை வந்தாறுமூலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும், வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்திலும் பயின்றுள்ளதுடன், தனது இடைநிலைக்கல்வியினை மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் நிறைவு செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞானப்பிரிவில் தனது பட்டப்படிப்பினை நிறைவு செய்ததுடன், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். 

2004 ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியனின் புலமைப்பரிசில் பெற்று நெதர்லாந்து நாட்டில் விவசாய முதுமாணிப் பட்டத்தினை பெற்ற இவர் மூன்று பட்டப்பின் டிப்ளோமா கற்கைநெறிகளை விவசாய நிர்வாகத்திலும் (பேராதனை பல்கலைக்கழகம்), பொதுமுகாமைத்துவம் (இலங்கை நிர்வாக அபிவிருத்தி நிறுவகம்), திட்டமுகாமைத்துவத்தினையும் பூர்த்தி செய்துள்ளார்.

இவற்றுக்கு மேலாக 10 இற்கு மேற்பட்ட விவசாய துறையுடன் தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகளை அங்கீகாரம் பெற்ற சர்வதேச சஞ்சிகைகளிலும், உள்ளூர் சஞ்சிகைகளிலும் பிரசுரித்திருப்பது இவரின் விசேட திறமை என்பதும்

குறிப்பிடத்தக்கது.