முனைக்காட்டில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு களப்பு பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த நிலையமொன்று இன்று அதிகாலை மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றவியல் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றவியல் விசாரணை பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 02இலட்சம் மில்லி லீற்றர் கசிப்பு காய்ச்சுவதற்கான கோடாவும் 90ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டதுடன் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றவியல் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை,உற்பத்தி ஆகியவற்றை தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றவியல் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பண்டார தலைமையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.