திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கிசூடு சம்பவம் -நடந்தது என்ன?

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று இரவு மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு நடைபெற்ற இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.


குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிசூடு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் பொலிஸ் நிலையமொன்றில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி சூடு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தருக்கு விடுமுறை வழங்க மறுத்ததன் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த துப்பாக்கிசூடு சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதுடன் மக்கள் மத்தியில் பீதி நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் கல்முனை,அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.