மட்டக்களப்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அதிரடி -மூன்று உணவகங்களுக்கு தண்டப்பணம்


மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வெட்டுக்காடு பொதுச்சுகாதார பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத மூன்று உணவகங்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் கிஷான்தராஜ் தலைமையில் நேற்று இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு-திருமலை பிரதான வீதி உட்பட பல இடங்களில் உள்ள உணவகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது சுகாதார நடைமுறைகளைப்பின்பற்ற தவறிய மூன்று உணவகங்களுக்கு வழங்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் இரண்டு உணவகளுக்கு தலா 10,000ரூபா,70,0000ரூபா தண்டப்பனம் விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் குறித்த வழக்கினை விசாரணை செய்த நிலையில் உணவக உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை செய்யப்பட்டு இந்த தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

இதேபோன்று நேற்று முன்தினம் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபையின் சாலையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது டெங்கு பரவலை ஏற்படுத்தும் நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக குறித்த சாலைக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த சாலை முகாமையாளருக்கு 25000ரூபா தண்டப்பணம் விதித்ததுடன் நீதிவானால் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.