​இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்களுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்க நடவடிக்கை...!!


இலங்கை போக்குவரத்துச்சபையில் ஐந்து வருடகாலம் பணியாற்றியுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும் ஏனைய ஊழியர்களுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்கவும் நடவடிக்கை  எடுக்கப்படுவதுடன் கபொத சாதாரண தர கல்வித்தகைமையற்ற ஊழியர்;களுக்கு என்வீகியு தகைமையை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு ஏறாவூர் போக்குவரத்துச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள உள்ளக வீதி திறப்பு விழா சனிக்கிழமை (06) நடைபெற்றது. இந்நிகழ்வில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் ஓரிலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுமார் முப்பத்தெட்டு இலட்சம் ரூபா நிதியில்  இங்கு கொங்கிறீட் வீதி அமைக்கப்பட்டுள்ளது.


சாலை முகாமையாளர் எம்எம். சைனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொது ஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர் என்.எம்.எம். சுகைப் ,கிழக்கு மாகாண சுற்றுலாத் துறை பணிப்பாளர் ஹரி பிரதாப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இராஜாங்க அமைச்சர் இங்கு மேலும் பேசுகையில்-- ஏறாவூர் சாலைக்கு வருகைதருவதை நான் நிறுத்துவதாகவே முடிவுசெய்திருந்தேன். காரணம்ää  இந்த சாலை குப்பைகள் நிறைந்த இடமாகவே  இருப்பதாகவும் காலடி வைக்கமுடியாது என்றும்  அறிந்தேன். இதனால் முதலில் உள்ளே செல்வதற்கான வழியைச் செய்யவேண்டும் என பலரும் கூறினார்கள். ஆனால் இங்கு வந்து பார்த்தபோது சுத்தமாக காணப்படுகிறது. அத்துடன் சீரான பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நான் எமது கட்சியின் அமைப்பாளர் சுகைப் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். அவர் இங்குள்ள நிலைமையினைக் கருத்திற்கொண்டு நிதியினை வழங்கி வீதியினை அமைத்துள்ளார். இப்போது இங்கு குப்பைகள் இல்லை. இதேபோன்று ஊழியர்களிலும் குப்பையானவர்கள் இருக்கிறார்கள். அதனையும் சுத்தம் செய்யவேண்டும்.


குறிப்பாக எமது நாட்டிலுள்ள மின்சாரசபை ää நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை போன்ற  சபைகள் மேம்பாட்டு நிலையில் இயங்குகின்றபோதிலும் போக்குவரத்துச்சபை மாத்திரம் கீழ்மட்டத்தில் காணப்படுகிறது. எனவே அடுத்த ஒருவருடகாலத்திற்குள் போக்குவரத்துச்சபையினையும் மேம்பாட்டுநிலைக்குக்கொண்டு வருவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


விசேடமாக போக்கவரத்துச்சாலைகளுக்கான சட்ட திட்டங்கள் உருவாக்கப்படும்போது சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் நன்மை பயக்கக்கூடியவகையில் அமையவேண்மெனக்கேட்டுள்ளேன். காரணம் அவர்கள்தான் எமது நிறுவனத்திற்கு நிதியைக்கொண்டுவருபவர்கள். அதேபோன்று அவர்கள் பயணிகளுடன் சுமுகமான உறவைப்பேணி நடக்க வேண்டும்.

அதேபோல புகை பரிசோதிக்கும் தற்போதைய முறையினை மாற்றி புதிய முறையொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது என்றார்.