மட்டக்களப்பு- குருமணிவெளி வாவியிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு...!!


(புருசோத்)
மட்டக்களப்பு- குருமணிவெளி வாவியின் ஓடத்துறைப் பக்கமிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை(22) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 68 வயதுடைய குருமண்வெளி 12 ஐச் சேர்ந்த குமாரையா கோபாலசாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

செவ்வாய்க்கிழமை(21) இரவு 11 மணிவரைக்கும் தமது வீட்டிலிருந்த குறித்த முதியவர் அதன்பின்னர் காணாமல் போயுள்ளார்.

பின்னர் புதன்கிழமை காலை வாவியில் சடலம் ஒன்று கிடப்பதாக அறிந்த உறவினர்கள் பார்வையிட்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸாரும், மட்டக்களப்பு தடயவியல் பொலிஸாரும் சடலத்தை பார்வையிட்டதுடன், குறித்த முதியவர் பாவித்ததாக கருதப்படும் ஊன்றுகோல் ஒன்றும், டோச் லைட் ஒன்றும் ஆற்றங்கரை ஓரமாக கிடந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய சம்பவ இடத்திற்குச் சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் நிலமையை பார்வையிட்டு அரவது முன்னிலையில் ஆற்றிலிருந்த சடலம் மீட்கப்பட்டதையடுத்து சடலம் தம்முடைய உறவினர்தான் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

சடலத்தைப் பார்வையிட்ட திடீர் மரணவிசாரணை அதிகாரி சடலத்தை பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.