தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோத போதைப்பொருள் பாவனையினை கண்டறியும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினால் தொடர்ச்சியான தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இதனடிப்படையில் களுவன்கேணியில் உள்ள காட்டுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று அதிகாலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது.
இங்கு கசிப்பு காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 03இலட்சத்து 20 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா,56000மில்லி லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் இது தொடர்பில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களும் கைதுசெய்யப்பட்டவர்களும் ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.