மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக தடுப்பூசி ஏற்றும் பணிகள் -சுகாதார பிரிவினர் அறிவுறுத்தல்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்று அதிகரித்துவரும் நிலையில் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுவருகின்றன.

தடுப்பூசியை இதுவரையில் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அதேநேரம் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் இதுவரையில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டதுடன் 60வயதுக்கு மேற்பட்டவர்களில் முதலாம் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட இந்துக்கல்லூரியில் பொதுச்சுகாதார பரிசோதகர் மிதுன்ராஜ் தலைமையில் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேபோன்று அமிர்தகழி சித்திவிநாயகர் வித்தியாலயம்,திராய்மடு தமிழ் வித்தியாலயம்,திருப்பெருந்துரை ஸ்ரீமுருகன் வித்தியாலயம் ஆகியவற்றில் இன்று தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

நாளைய தினம் சத்துருக்கொண்டான்,பனிச்சையடி பகுதியில் தடுப்பூசியை இதுவரையில் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கும், 60வயதுக்கு மேற்பட்டவர்களில் முதலாம் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகளும் ஏற்றப்படவுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.