மட்டக்களப்பு மாநகரசபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முன்மொழியப்பட்ட 26 வீதிகளின் அபிவிருத்தி பணிகள் வேலைப்பகுதியினரின் தாமதம் காரணமாக நிறைவடையாது உள்ளத்துடன், மண் வீதியில்லா மாநகரம் எனும் திட்டத்தில் முன்மொழியப்பட்ட 8 வட்டாரங்களுக்கான வேலைகளிலும் தாமதமாகி உள்ளது.
இந்நிலையில் குறித்த திட்டங்களை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய விரைவாக அபிவிருத்தி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதற்கமைய, மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கொக்குவில் எல்லைவீதி 1ம் குறுக்கானது குறித்த வட்டார உறுப்பினர் க.ரகுநாதன் அவர்களின் 2020ஆம் ஆண்டு பாதீட்டு முன்மொழிவுக்கு அமைய தார் வீதியாக செப்பனிடும் பணியானது இன்று மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தலைமையில் குறித்த வட்டார உறுப்பினர் ரகுநாதன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்துடன் புன்னைச்சோலை வட்டார மாநகர சபை உறுப்பினர் ரூபன் அவர்களால் 2020ஆம் ஆண்டு பாதீட்டில் முன்மொழியப்பட்ட சித்திவிநாயகர் 2ஆம் குறுக்கு வீதி மற்றும் 3ஆம் குறுக்கு வீதிகளும் தார் வீதிகளாக புனரமைக்கும் பணியும் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது
குறித்த வீதிகளின் ஆரம்ப கட்ட பணிகளை மாநகர முதல்வர் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களான வு.இராஜேந்திரன், சிவராசா ரகுநாதன் ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.