மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் 21சிறுவர்கள் உட்பட 22பேருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த இல்லம் மூடப்பட்டுள்ளது.
குறித்த இல்லத்தில் உள்ள மாணவர்கள் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சென்றபோது அங்கு சில மாணவர்களுக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஏனைய சிறுவர்களுக்கும் அங்கு கடமையாற்றுபவர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு 19பேருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் மேலும் மூவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் குறித்த சிறுவர் இல்லம் மூடப்பட்டுள்ளது.
குறித்த சிறுவர்கள் இல்லத்திலிருந்த 21 சிறுவர்களும் ஒரு விடுதி காப்பாளருமான 22பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.