பயணத்தடையினை மீறும் மட்டக்களப்பு மக்கள் -எச்சரிக்கும் சுகாதார பணிப்பாளர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலத்தில் 68கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதா சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.

இன்று காலை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் 24மணி நேரத்தில் 68கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.ஏறாவூர் சுகாதார பிரிவில் 16பேரும் செங்கலடி சுகாதார பிரிவில் 15பேரும்,ஆரையம்பதி சுகாதார பிரிவில் 11பேரும் பட்டிப்பளை சுகாதார பிரிவில் 08பேரும் காத்தான்குடி சுகாதார பிரிவில் 05பேரும் களுவாஞ்சிகுடி பகுதியில் 04பேரும் ஓட்டமாவடி சுகாதார பிரிவில் 03பேரும் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் இரண்டு பேருமாக இவை இனங்காணப்பட்டுள்ளது.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 3935பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 57பேர் மரணமடைந்துள்ளனர்.மூன்றாவது அலை காரணமாக 2952பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 48பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த ஏழு தினங்களில் 693கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த 06தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் 19959பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.தடுப்பூசி வழங்கப்படுவர்கள் ஆபத்து அதிகமுள்ள பகுதிகளில் உள்ள 60வயதுக்கு அதிகமானவர்கள்,ஆபத்து நிலை அதிகமுள்ள கர்ப்பிணிப்பெண்கள்,வயோதிப மடத்தில் உள்ளவர்கள்,ஆபத்து அதிகமுள்ள பகுதிகளில் உள்ள தடக்கள உத்தியோகத்தர்கள்,ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றுபவர்கள் போன்றவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் குறைந்தளவிலேயே வழங்கப்படுகின்றது.பயணத்தடை அமுல் உள்ளபோதிலும் மக்களின் நடமாட்டம் மிகவும் அதிகளவிலேயே காணப்படுகின்றது.கொவிட் தொற்றினை கட்டுப்பாட்டின் கீழ் பயணக்கட்டுப்பாட்னை பயன்படுத்தி வீட்டில் இருப்பதன் மூலமே தொற்றின் அதிகரிப்பினை குறைக்கமுடியும்.